Archives: ஆகஸ்ட் 2022

அறிவு காயப்படுத்தும்போது

கிராண்ட் கேன்யன் வழியாக, இருபத்தைந்து நாட்கள் மிதவைப் படகு பயணத்திற்கு பிறகு, சாக் எல்டரும் அவரது நண்பர்களும் கரை வந்துசேர்ந்தனர். அவர்களின் படகுகளை மீட்டெடுக்க வந்த நபர் கோவிட்-19 வைரஸ் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்கள் அதை நம்பவில்லை, அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதும் அவர்களின் தொலைபேசிகள் பெற்றோரின் அவசர செய்திகளுடன் வந்து சேர்ந்தன. சாக்கும் அவனது நண்பர்களும் திகைத்தனர். அவர்கள் மீண்டும் ஆற்று பயணத்திற்கு திரும்பிப்போய் தற்போதைய தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட எண்ணினர்.

பாவ உலகத்தில், அறிவானது வேதனையை கூட்டக்கூடியதாயிருக்கிறது. பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்” (1:18) என்று குறிப்பிடுகிறார். குழந்தையின் அறியாமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? காரணம் இனவெறி, வன்முறை மற்றும் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. நாம் வளர்ந்து, நம்முடைய பலவீனங்களையும் தீய எண்ணங்களையும் பகுத்தறிவதற்கு முன்பு மகிழ்ச்சியாக இருக்கவில்லையா?

எங்கள் மாமா ஏன் அதிகமாக குடிக்கிறார் அல்லது எங்கள் பெற்றோரின் விவாகரத்துக்கு என்ன காரணம்? போன்ற குடும்ப இரகசியங்களை அறிவதற்கு முன்பு நாம் மகிழ்ச்சியாய் இருக்கவில்லையா?

அறிவின் வேதனை விரும்பத்தக்கதல்ல. ஆனால் அவற்றை சகித்துக்கொள்ளவும், அதில் வளரவும் நம்மை ஊக்குவிக்கும், ஒரு உயர்ந்த அறிவு இருக்கிறது. இயேசு என்னும் தேவனுடைய வார்த்தையே நம்முடைய

இருளில் பிரகாசிப்பிக்கும் ஒளி (யோவான் 1:1-5). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரிந்தியர் 1:30). இயேசுவிடம் சரணடைவதற்கு உங்களுடைய வேதனையே ஒரு காரணம். அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களை பாதுகாக்கிறார்.

விளக்கை எரியவிடுங்கள்

ஓட்டல் வணிகத்தின் ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அது ஒரு இரவு நேரம். அந்தக் கட்டிடத்தை சுற்றி எதுவும் இல்லை. அந்தக் கட்டிடத்தின் வராந்தா கதவின் அருகில் இருந்த விளக்கிலிருந்து மட்டும் சிறிய வெளிச்சம் வந்தது. பயணிகள் படிகளில் ஏறிச்சென்று கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அந்த ஒளி போதுமானதாயிருந்தது. அங்கே “உங்களுக்காக நாங்கள் விளக்கை எரிய விடுகிறோம் & quot; என்னும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. சோர்வோடு வரும் பயணிகள் தங்கி இளைப்பாறுவதற்கு அந்த விளக்கு வரவேற்படையாளமாய் அமைந்தது.

இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அந்த வரவேற்பு விளக்கைப் போன்றவர்கள் என்று இயேசு சொல்லுகிறார். அவர் தன்னை பின்பற்றுபவர்களைப் பார்த்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14) என்றார். விசுவாசிகளாகிய நாமும் இருள் சூழ்ந்த உலகத்திற்கு ஒளியாக திகழ்கிறோம்.

மேலும் அவர் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (வச. 16) நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கும்படிக்கு கூறுகிறார். நம்முடைய விளக்கை அணையாமல் எரியச் செய்தால், நாம் பலரை நம்மிடமாய் வரவேற்று, மெய்யான ஜீவ ஒளியான கிறிஸ்துவை (யோவான் 8:12) அறிந்துகொள்ளும்படி செய்யலாம். சோர்ந்துபோன, இருள் சூழ்ந்த உலகத்தில் அவருடைய விளக்கு அணையாமல் எரிகிறது.

உங்கள் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா? இயேசு உங்கள் மூலமாய் விளக்கை பிரகாசிக்கச்செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பார்த்து அவ்வெளிச்சத்தைத் தங்களிலும் பிரகாசிக்கச்செய்வார்கள்.

காலத்தின் விதைகள்

1879 ஆம் ஆண்டில் வில்லியம் பீலுடைய செய்கைகள் பார்ப்பவர்களுக்கு முட்டாள்தனமாய் தெரிந்தது. ஏனெனில் தாவரவியல் பேராசிரியரான அவர் இருபது பாட்டில்களில் விதைகளை நிரப்பி, அதை மண்ணில் புதைத்து வைத்தார். ஒரு விதையின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் பீலின் இந்த முயற்சியானது நூற்றாண்டுகள் நீடிக்கக்கூடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இருபது வருடங்களும் ஒரு பாட்டிலை தோண்டியெடுத்து அது முளைத்திருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

விதைக்கிறதைக் குறித்து இயேசு அநேக போதனைகளை செய்திருக்கிறார். விதைக்கிறதை கர்த்தருடைய வார்த்தையை பறைசாற்றுவதோடு ஒப்பிடுகிறார் (மாற்கு 4:15). சில விதைகளை சாத்தான் கெடுத்துப்போடுகிறான்; சில விதைகள் வேரூன்றுவதில்லை; சில விதைகள் முள்ளுகளுக்கிடையே சிக்கி வளராமல் போய்விடுகிறது (வச. 15-19). நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, எந்த விதை பலன்  கொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய வேலை விதைப்பது, அதாவது, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது: “உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (16:15).

2021ஆம் ஆண்டு, பீலின் மற்றுமொரு பாட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், 142 ஆண்டுகளுக்கு மேலாக விதைகள் உயிர்பிழைத்திருக்கிறது கண்டறியப்பட்டது. நம்முடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்படிக்கு தேவன் நம் மூலமாய் கிரியை செய்தால், நாம் பகிர்ந்துகொள்ளும் வார்த்தை எப்போது வேரூன்றும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்முடைய நற்செய்தி விதையானது, ஒரு நாள் நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு, “ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாக” (4:20) பலன் கொடுக்கும்.

தேவனிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்தல்

சமையலறை மேடையில் பொருந்தக்கூடிய அளவிற்கு ஒரு ஆலமரத்தை கற்பனை செய்து பாருங்கள். போன்சாய் என்ற மரம் அப்படித்தான், காட்டில் நீங்கள் பார்க்கும் பெரிய ஆலமரத்தின் மிகச்சிறிய உருவமே இந்த போன்சாய் மரம். பெரிய மரத்திற்கும் இந்த போன்சாய் மரத்திற்கும் இடையே எந்த மரபணு வித்தியாசமும் கிடையாது. அதை நட்டு வைத்திருக்கிற தொட்டியின் அளவினாலும், அதின் வேர் அடிக்கடி  சுத்திகரிக்கப்படுவதினாலும் அதின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு சிறியதாகவே இருக்கிறது.

இந்த போன்சாய் மரங்கள் அழகாய் அலங்காரமாய் தெரிந்தாலும், அது கட்டுப்பாட்டை உருவகப்படுத்துகிறது. மரங்கள் அதின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்தாலும், அவற்றை வளரச் செய்வது தேவனே.

தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடத்தில், “கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன்” (எசேக்கியேல் 17:24) என்று பேசுகிறார். பாபிலோனிய சிறையிருப்பை அனுமதிப்பதின் மூலம் இஸ்ரவேல் தேசத்தை “வேறோடு பிடுங்கும்” எதிர்காலத்தைக் குறித்து தேவன் முன்னறிவிக்கிறார். ஆகிலும் தேவன் இஸ்ரவேலில் கனி தரக்கூடிய ஒரு புதிய விருட்சத்தை ஓங்கி வளரச்செய்வார்; அதின் நிழலில் “சகலவிதப்பட்சி ஜாதிகளும்” வந்து அடைக்கலம் தேடும் (வச. 23).

சம்பவிக்கப்போகிற நிகழ்வுகள் அனைத்தும் கட்டுப்பாட்டை மீறியதாக தென்பட்டாலும், தேவன் அதை கட்டுக்குள் வைத்திருந்தார். இந்த உலகம், நம்முடைய சூழ்நிலைகளால், கடின உழைப்பின் மூலம் நாமே கட்டுப்படுத்த முடியும் என சொல்லுகிறது. ஆனால் வளரச்செய்யும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போதே, மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.